மக்களால் ‘கேப்டன்’ என அழைக்கப்படும் நடிகரும் தே.மு.தி.க. கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர்-28) காலமானார்.
அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர், இன்று அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் அறிவித்தனர்.
திரைத்துறைப் பயணம்
நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், திரைத்துறையில் வாய்ப்பைப் பெறுவதற்காக விஜயராஜ் என தனது பெயரைச் சுருக்கிக்கொண்டார்.
மாகாளிப்பட்டியில், தனது தந்தையான அழகர்சாமியின் அரிசி ஆலையைப் பொறுப்பெடுத்து நடத்திவந்த விஜயகாந்த், திரைத்துறையில் நுழைவதில் தொடர்ந்து தீவிரம் காட்டிவந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் போன்று முடி அழகு, முகவெட்டு, மிடுக்குக் கொண்ட விஜயகாந்த், ரஜினிக்குத் தம்பியாக ’என் கேள்விக்கு என்ன பதில்’ என்ற திரைப்படத்தில் முதன்முறையாக நடித்தார். 101 ரூபாய் முற்பணம் வாங்கிக் கொண்டு தமிழ் திரைத்துறைப் பயணத்தை ஆரம்பித்தார்.
இதைத்தொடர்ந்து, எம்.ஏ.காஜா இயக்கியிருந்த ‘இனிக்கும் இளமை’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். அப்போது, விஜய்ராஜ் என்ற பெயர் விஜயகாந்த் ஆக மாறியது.
எல்லோருக்கும் ஒரே தரமான உணவு
விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த இரண்டாவது திரைப்படமான ‘அகல் விளக்கு’ படப்பிடிப்பின்போது, கதாபாத்திர வேடம் எல்லாம் போட்டுவிட்டு அதிகாலை முதல் கதாநாயகிக்காகக் காத்திருந்த விஜயகாந்தை, காலை உணவும் சாப்பிட விடாமல் மதியம் வரை படக்குழுவினர் காக்கவைத்துவிட்டனர்.
இதனால், படப்பிடிப்புத் தளத்தில் எவரும் பசியுடன் இருக்கக்கூடாது எனவும் தான் சாப்பிடும் அதே தரத்தைக்கொண்ட உணவையே கடைநிலை பணியாளர்களும் சாப்பிட வேண்டும் என்றும் சமத்துவ முறையைக் கொண்டுவந்தார்.
இதனை, பின்னாட்களில் பேட்டியொன்றின்போது விஜயகாந்த் கூறியிருந்தார். அத்துடன், பணியாளர்கள் அனைவருடனும் சேர்ந்திருந்தே சாப்பிடும் வழக்கத்தையும் அவர் கொண்டிருந்தார்.
இதேவேளை, விஜய்காந்த் நடித்த முதல் ஐந்து திரைப்படங்கள் அவருக்குக் கைகொடுக்காத நிலையில், அவர் நடிப்பில், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
இதன்பின்னர், விஜயகாந்தின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் தொடர் வரவேற்புக் கிடைத்தது. அத்துடன், அவரது கருப்பு நிறத்தை வைத்து அவரை நிராகரித்திருந்த பல இயக்குநர்கள் விஜயகாந்தின் அலுவலகத்தை நாடிவந்து காத்திருந்த நிகழ்வுகளும் நடந்தேறின.
மேலும், இப்ராஹிம் ராவுத்தர் என்ற விஜயகாந்தின் நெருங்கிய நண்பரே, அவருக்குப் பக்கபலமாக இருந்து, திரைக்கதைகளை தெரிந்தெடுத்துக் கொடுத்தும் முகாமையாளராகவும் பணியாற்றினார்.
இதேவேளை, திரைத்துறை கடந்து, நிச வாழ்வில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வழக்கத்தை விஜயகாந்த் தொடர்ந்து செய்து வந்தார். அதாவது, உதவியென்று தன்னைத் தேடிவந்த எவரும் உதவி பெறாமல் சென்றதில்லை என்பதே விஜயகாந்தின் உதவும் குணத்துக்குச் சான்று. அவரின் சக கலைஞர்களும் இந்தக் குணத்தைப் பல இடங்களில் கூறியுள்ளனர்.
மேலும், விஜயகாந்த் நடித்து வெளியாகிய ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘உழவர் மகன்’ மற்றும் ‘புலன் விசாரணை’ திரைப்படங்கள் வெள்ளி விழாக்கண்டு மாபெரும் வெற்றிபெற்றன.
குறிப்பாக, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் உச்சத்தில் இருந்த காலத்திலேயே தனக்கென ஒரு தனித்துவ இடத்தை தமிழ் துரைத்துறையில் அவர் உருவாக்கியிருந்தார்.
உதாரணத்துக்கு, ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களின் 100ஆவது திரைப்படம் தோல்விகண்டது. ஆனால், விஜயகாந்த் நடிப்பில் வெளியான 100ஆவது திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’ மாபெரும் வெற்றிபெற்றது. மக்கள் மத்தியில் கேப்டனாக அழைக்கப்பட்டார் விஜயகாந்த்.
இவ்வாறு, 150இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் விஜயகாந்த். முக்கியமாக, 1984இல் மட்டும் ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்தார். அந்தளவுக்கு அவரது திரைப்பயணம் சிறந்து விளங்கியது.
திரைத்துறைப் பயணத்தில், ‘செந்தூரப்பூவே’ திரைப்படத்திற்காக தமிழக அரசு, சிறந்த நடிகருக்கான விருதை விஜயகாந்துக்கு வழங்கியது. அத்துடன், தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.விருது, கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
அத்துடன், 1999ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தெரிவாகிய விஜயகாந்த், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நட்சத்திரக் கலைவிழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்தி நடிகர் சங்கம் பட்டிருந்த கடனை அடைத்தார்.
அதுமட்டுமல்லாமல், நலிவடைந்த கலைஞர்களுக்குப் பல உதவிகளைச் செய்ததுடன் அவர்களுக்கு உதவும் பொருட்டு ஓய்வூதியத் திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.
அரசியல் களம்
2002ஆம் ஆண்டு காவிரிப் பிரச்சினை உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அனைத்துத் திரைத்துறையினரையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டத்தை நெய்வேலியில் நடத்தி கவனத்தைப் பெற்றார்.
அத்துடன், ஹிந்தி எதிர்ப்பு, ஈழத் தமிழர் விடுதலை உள்ளிட்ட விடயங்களில் அதீத ஈடுபாடு கொண்டிருந்தார் விஜயகாந்த். குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் மீது கொண்ட பேரன்பின் வெளிப்பாடாக தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
மேலும், 1984ஆம் ஆண்டு இனவழிப்பாக முன்னெடுக்கப்பட்ட ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து திரைத்துறையினருடன் உண்ணாவிரதம் நடத்தியதுடன், அப்போதைய தமிழக ஆளுநரிடம் மனுக் கையளித்து, நீதிவேண்டிக் கோரிக்கை வைத்தார்.
இவ்வாறு தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த விஜயகாந்த், 2000ஆம் ஆண்டு தனது இரசிகர் மன்றத்துக்கென்று தனியாகக் கொடியை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, 2001ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் இரசிகர் மன்றம் சார்பாகச் சுயேட்சையாகப் போட்டியிட்ட பலர் வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியையடுத்து, விஜயகாந்த் தனது அரசியல் வருகைக்கு ஆழமான அத்திவாரத்தைப் போட்டார். இதையடுத்து, வெளியான அவரது திரைப்படங்களில் கட்சிக் கொடி இடம்பெற்றதுடன் அரசியல் ரீதியான வசனங்களும் மக்களைச் சென்றடைந்தன.
தொடர்ந்து, 2005ஆம் ஆண்டு மதுரையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தி, தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் (தே.மு.தி.க.) என்ற கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்துத் தொடங்கினார்.
இதன்பின்னர், கட்சி ஆரம்பித்த ஒரே ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டார். இதன்போது, விருதாச்சலம் தொகுதியில் அபார வெற்றியைப் பதிவுசெய்தார்.
அதைத் தொடர்ந்து, 2011ஆம் ஆண்டுவரை தனித்துப் போட்டியிட்ட அவர், 2011இல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தார். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் 29 தொகுதிகளில் வென்று எதிர்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தார் விஜயகாந்த்.
என்றபோதும், அரசியல் வீறுக்கு ஈடுகொடுக்கக்கூடிய அளவுக்கு விஜயகாந்துக்கு உடல் ஒத்துழைக்காத நிலையில் தடுமாற்றங்களைக் கண்டார். மேடைப் பேச்சுக்களில் அனல்பறக்கப் பேசிய அவர் தொய்வு நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதையடுத்து, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தபோதும் பிரசாரக் கூட்டங்களில் சோபிக்கமுடியாமல் போனது. அவரது உடல்நிலை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளான நிலையில், பிரசார முகாந்திரங்கள் இல்லாமல் அடுத்தடுத்த தேர்தல்களில் தே.மு.தி.க. தோல்வியைச் சந்தித்தது.
என்றபோதும், தனது அரசியல் பயணக் காலத்திலும் இலவச திருமண மண்டபங்கள், ஏராளமான ஏழை இளைஞர், யுவதிகளுக்கு இலவசத் திருமணம், கேப்டன் ஸ்போர்ட்ஸ் அகடமி மூலம் விளையாட்டு வீர, வீராங்களைகளை உருவாக்குதல், நன்கொடைகள், இலவச கணினிப் பயிற்சி மையம் என பல வழிகளிலும் உதவிகளை வாரி வழங்கினார்.
அதனைவிட, சுனாமிப் பேரிடர், குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம், கார்கில் போர் என பேரிடர் சூழலிலும் பெருமளவில் நிவாரண உதவிகளைச் செய்துவந்தார்.
இவ்வாறு திரைத்துறையிலும் அரசியல் களத்திலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்து மக்கள் மனங்களில் என்றும் மதிப்புக்குரிய கேப்டனாக உள்ள விஜயகாந்த்தின் மறைவு அவரது இரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பேரிழப்பாகும்.
மக்கள் மற்றும் திரைத்துறையினருடன் இணைந்து திரைக்கண் குழுமம், விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் அவரது குடும்பத்தினரின் துயரிலும் பங்குகொள்கிறது.
Discussion about this post